அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது குறித்து ஆணை பெறுவதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களை வட்டாரக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்த பள்ளிக் கல்வித் துறைக்கு, தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலர் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்பது குறித்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துகளை கேட்ட பின்பு அமைச்சரவை கூடி முடிவு செய்யும்.
அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது குறித்து ஆணை பெறுவதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளன. நீதிமன்றத் தீர்ப்பு விவரம் முழுமையாகக் கிடைத்த பிறகு அது குறித்து அரசு பரிசீலித்து உரிய முடிவு எடுக்கும்.
அடுத்த ஆண்டுக்கான புதிய பாடப் புத்தகங்கள் இன்னும் இருபது நாள்களுக்குள் முழுமையாக தயார் நிலையில் இருக்கும்.
சிறப்பு ஆசிரியர் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் வழக்கு முடிந்த பின்னர் ஐந்து நாள்களுக்குள் அவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றார்.