தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை தை மாதத்தில் மட்டுமே நடத்த வேண்டும் என்பது குறித்து அரசு பரிசீலித்து உரிய முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் பாலமுருகன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:
பழங்காநத்தம் ஊர்காவலன் சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, பிப். 25-ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்திய விழாக் குழுவினருக்கும், நிகழாண்டில் நடத்த உள்ள விழாக் குழுவினருக்கும் இடையே சில பிரச்னைகள் உள்ளன. ஜல்லிக்கட்டு விழாவில் பரிசுப் பொருள்கள் மற்றும் பண வசூலில் முறைகேடுகள் நடைபெறுகிறது. எனவே, நீதிமன்றம் சிறப்பு குழு அமைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தினால் போலீஸாருக்கும், வருவாய்த் துறைக்கும் வேறு பணிகள் இல்லையா என கேள்வி எழுப்பியதோடு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை தை மாதம் மட்டுமே நடத்த வேண்டும் என்பது குறித்து அரசு பரிசீலித்து உரிய முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
மேலும், இதுகுறித்து தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க, அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப். 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.