கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் அதிமுவுடன் கூட்டணியில் இணைவது நேற்று உறுதியானது. அதன்படி, பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு ஐந்து தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், தி.மு.க. எம்.பி.யான கனிமொழி நேற்று தில்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியும் சேர்த்து 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. எனினும் இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.
இதனிடையே தில்லியில் இருந்து சென்னை திரும்பிய திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
எண்ணிக்கையில் மட்டுமே வலுவான கூட்டணி அமைந்துவிடாது. காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் முகல் வாஸ்னிக், கே.சி.வேணுகோபால் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கின்றனர். தோழமை கட்சிகளுடனான கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார். கீழ்த்தரமாக விமர்சித்த பாமகவுடன் கூட்டணி அமைத்துள்ளது அதிமுக. இவ்வாறு அவர் கூறினார்.