மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி அமைத்திருப்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெறுவது இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது.
மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பாமகவை இழுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக மறைமுகப் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. இதில் பாமகவின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், மதிமுகவும் வெளிப்படையாக திமுக கூட்டணியில் தாங்கள் இருப்பதாக தொடர்ந்து கூறிவந்தபோதும், அதை திமுக தரப்பிலிருந்து யாரும் வெளிப்படையாகக் கூறாமல் இருந்துவந்தனர்.
இந்த நிலையில், பாமக வந்தால் திமுக கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியேறும் என திமுகவின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இதே மனநிலையில்தான் திருமாவளவனும் இருந்தார்.
அதுபோல, பாமக இணைந்தால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைக் கழற்றி விட திமுகவும் தயாராக இருந்தது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலை காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
இந்தச் சூழலில், அதிமுக கூட்டணியில் பாமக இணைந்திருப்பது, திருமாவளவனுக்கு பெரும் நிம்மதியை அளித்திருக்கிறது. திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறுவது இப்போது உறுதியாகியிருக்கிறது.