மக்களவைத் தேர்தலில் பாமக-வுடனான கூட்டணி அதிமுகவுக்கு பலவீனமாக அமையும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாமக கூட்டணி இறுதி செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தக் கூட்டணி குறித்து திருமாவளவன் அளித்த பேட்டி:
அதிமுக - பாமக கூட்டணி ஏற்படும் என்பது ஏற்கெனவே தெரிந்த ஒன்று. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இந்தக் கூட்டணி அதிமுகவுக்கு பலம் சேர்க்கும் என சிலர் கூறி வருகின்றனர். இது அதிமுகவுக்கு பலவீனமாகத்தான் அமையும். இதைத் தேர்தல் முடிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 2009 தேர்தலில் இதேபோன்று 7 தொகுதிகளில் பாமக போட்டியிட்டு, படுதோல்வி அடைந்தது அனைவரும் தெரிந்த ஒன்று. அதே நிலைதான் இப்போதும் ஏற்படும்.
விடுதலைச் சிறுத்தைகளைப் பொருத்தவரை தொடக்கத்திலிருந்தே திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறோம் என்றே கூறி வருகிறோம். மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவது என்பது எனது விருப்பம். இருந்தபோதும், திமுக கூட்டணி எந்தத் தொகுதியை ஒதுக்கீடு செய்தாலும் போட்டியிடத் தயார் என்றார் அவர்.