5, 8ம் வகுப்புக்கு திடீர் பொதுத் தேர்வு: கல்வியில் பின்தங்கிய மாணவர்களை பாதிக்குமா?

தங்களது 16வது வயதில், 10ம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதும் மாணவ, மாணவிகளே அதை நினைத்து பயப்படும் நிலையில், திடீரென 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு அறிவிப்பு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
5, 8ம் வகுப்புக்கு திடீர் பொதுத் தேர்வு: கல்வியில் பின்தங்கிய மாணவர்களை பாதிக்குமா?


சென்னை: தங்களது 16வது வயதில், 10ம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதும் மாணவ, மாணவிகளே அதை நினைத்து பயப்படும் நிலையில், திடீரென 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு அறிவிப்பு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளாக 10ம் வகுப்புப் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. வழக்கமான ஒன்றுதான் என்றாலும், அடுத்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளும், அவர்களின் பெற்றோரும் இப்போதே பயத்தில் ஆழ்ந்திருப்பதை பார்க்க முடிகிறது.

ஆனால், திடீரென 5 மற்றும் 8ம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு தந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் அதுவும் இந்த ஆண்டே என்று இன்னும் ஓரிரு மாதத்தில் தேர்வு நெருங்கும் நிலையில் அறிவிக்கப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் நிகழாண்டில் பொதுத் தேர்வு நடத்தப்படாது என்று கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருப்பது சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.  இந்த வகுப்புகளுக்கு மூன்றாவது பருவத் தேர்வையே பொதுத்தேர்வாக மாற்றி நடத்தும்படி அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. 

இதற்கான கேள்வித்தாளைத் தயாரிக்கும் பணியை தேர்வுத்துறை தொடங்கியுள்ளது. 

5-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களின் கேள்வித்தாளில் வார்த்தை விளையாட்டுகள், கோடிட்ட இடங்களை நிரப்புதல், பொருத்துக போன்ற வகையில் மாணவர்களின் மொழிசார்ந்த அடிப்படை விஷயங்களைப் பரிசோதிக்கும் வகையில் கேள்விகளும், கணிதப் பாடத்தில் பெருக்கல், வகுத்தல் சார்ந்த எளிய கணிதங்கள் சார்ந்த கேள்விகளும் கேட்கப்படும்.

 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புரிதல் திறன், எழுதும் திறனையும் சோதிக்கும் வகையில் கட்டுரை வடிவில் கேள்வித்தாளை அமைக்கவும் தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. இரண்டு வகுப்புகளுக்கும் கேள்வித்தாள் 60 மதிப்பெண்கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பெறும் மதிப்பெண், பிறகு 100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்பட்டுத் தேர்வு முடிவுகள் வெளியிடவுள்ளது பள்ளிக்கல்வித் துறை. 

இந்த முடிவால், கல்வியில் பின்தங்கியிருக்கும் மாணவ, மாணவிகளுக்கும், அவர்களது பெற்றோருக்கும் மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை அறிந்து கொண்டு அதற்கேற்ப கல்வித் தரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை கூறினாலும், 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் மிகப்பெரிய மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள் என்பதால் இதைக் கைவிட வேண்டும் என்றும் கூறுகிறார்கள். 

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை வழங்கிய அறிவுறுத்தல்கள் விவரம்:  அனைத்து மாவட்டங்களிலும் 5,  8  ஆகிய வகுப்பு பொதுத் தேர்வுக்கு 20 மாணவர்களுக்கு ஒரு தேர்வு மையம் அமைக்கப்படவேண்டும். அதற்கு குறைவாக உள்ள 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மிக அருகில் உள்ள தொடக்கப்பள்ளி அல்லது நடுநிலைப்பள்ளிகளில் தேர்வு எழுத வேண்டும். அதேபோல் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் அருகில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தேர்வு எழுத வேண்டும். அனைத்து வகை தொடக்க, நடுநிலை, மேல்நிலை, மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 5-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையினை மாவட்டக் கல்வி அலுவலர்கள் வட்டார அளவில் பெற்று, வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வள மைய அலுவலர்கள் கொண்டு குழு அமைத்து தேர்வு மையங்களினை தேர்வு செய்யப்பட வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு... மாணவர்களுக்கு தேர்வு 60 மதிப்பெண்களுக்கும், தேர்வு நேரம் 2 மணி என்ற அளவிலும் நடைபெறும். வினாக்கள் 3ஆம் பருவத்திற்கான பாடத் திட்டத்திலிருந்தும், முதல் மற்றும் 2ஆம் பருவத்திற்கான பாடத்திட்டத்திலிருந்து பொதுவான வினாக்களும் கேட்கப்படும். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தனியார், சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் ரூ. 50,  8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும் என கல்வித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. 

ஏற்கனவே நீட் தேர்வால் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவு பொசுக்கப்பட்டிருக்கும் நிலையில், கல்வியில் பின்தங்கியிருக்கும் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் இந்த பொதுத் தேர்வு அறிவிப்பால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. 5 மற்றும் 8ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள், மீண்டும் அதே வகுப்பில் பயிலும் நிலை மற்றும் மீண்டும் பொதுத் தேர்வு, தோல்வி எனும் நிலையால் பள்ளியில் இடைநிற்றல் அதிகரித்து, மீண்டும் குழந்தைத்  தொழிலாளர் முறை அதிகரிக்கும். பள்ளிப் படிப்பில் இடைநிற்றல் குறைந்து, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட்டு வரும் நிலையில், மீண்டும் இதையெல்லாம் அதிகரிக்கச் செய்யும் 5 மற்றும் 8ம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு மாற்றாக வேறு திட்டத்தை செயல்படுத்தலாம் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com