தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் வியாழக்கிழமை சந்திப்பு.
2019 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணியை இறுதி செய்வதிலும், தொகுதிப் பங்கீட்டிலும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக - பாமக இடையேயான கூட்டணி முதலில் இறுதி செய்யப்பட்டு, அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே நடைபெற்ற அதிமுக - தேமுதிக உடனான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
இதனிடையே திமுக கூட்டணியில் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், தேமுதிக தலைவர் விஜயகாந்தை வியாழக்கிழமை நேரில் சந்திக்கிறார். விஜயகாந்த் எனது நீண்டகால நண்பர். எனவே அவர் உடல்நலம் குறித்து விசாரிக்க மட்டுமே செல்வதாக திருநாவுக்கரசர் தெரிவித்தார்.