சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக - பாஜக - தேமுதிகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் இருக்கும் நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்தை சந்தித்துப் பேசியிருந்தார்.
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று சொல்லும் அளவுக்கு, இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்கு வந்து, அவரை சந்தித்துப் பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக கூட்டணியில் இணைய தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், 4 மற்றும் அதற்கும் குறைவான தொகுதிகளை ஒதுக்க அதிமுகவும், பாமகவுக்கு நிகரான தொகுதிகளை தேமுதிக கேட்டு வருவதும் இழுபறிக்குக் காரணங்களாக அமைந்திருந்தன.
இந்த நிலையில், திமுக பக்கம் தேமுதிகவை இழுக்கவும் சில முயற்சிகள் நடந்து வந்தது. அதன் ஒருபடியாகவே இன்று விஜயகாந்த்தை ஸ்டாலின் சந்திக்கவிருக்கிறார்.
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலின் போது தேமுதிக, திமுக கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது. இதுவும் தனது வெற்றி வாய்ப்பை இழந்ததற்கான காரணங்களில் ஒன்று என்று திமுக தலைவர்களின் மனதில் எங்கோ ஒரு மூலையில் இருந்து வந்தது. இதுவே இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்துடனான ஸ்டாலின் சந்திப்புக்குக் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.