சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் இடம்பெற்றிருக்கும் நகரமயமாக்கல், கட்டடங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையத்துக்கு புதிய வசதி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் முதன்மைச் செயலர் எஸ்.கிருஷ்ணன் புதிய வசதியைத் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகளின் ரூ.10 கோடி நிதியுதவியுடன் கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் நகரமயமாக்கல், கட்டடங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் தொடங்கப்பட்டது.
அரசின் ஆதரவுடன் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வரும் இந்த மையம், கட்டுமானம், சுற்றுச்சூழல், நிலைத்த நீடித்த தன்மை, ஸ்மார்ட் நகரங்கள், நகரமைப்புத் திட்டம் மற்றும் மாறுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் சேவையாற்றி வருகிறது.
இப்போது இந்த மையத்தில் மிகவும் சிறப்புவாய்ந்த சுற்றுச்சூழல் ஆய்வகம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகம் மார்ச் மாதம் முதல் தனது பணியைத் தொடங்கும். குடிநீர், கழிவுநீர் மற்றும் திடக் கழிவுகள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளை இந்த ஆய்வகம் மேற்கொண்டு, சுகாதாரமான நகரை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ளும்.