சிலைகளை கடத்தி பதுக்கிய வழக்கு தொடர்பாக கும்பகோணம் நீதிமன்றத்தில், ஏற்றுமதியாளர் ரன்வீர்ஷா வெள்ளிக்கிழமை ஆஜரானார்.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் ஆர். ரன்வீர்ஷா (56), ஏற்றுமதியாளர். இவரது வீட்டில் நிலத்தடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புராதன சின்னங்கள், தூண்கள், கலைப் பொருள்கள், உலோகம், கற்சிலைகளைத் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்து சில மாதங்களுக்கு முன்பு கைப்பற்றினர்.
இதையடுத்து, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ரன்வீர்ஷாவுக்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், ரன்வீர்ஷா விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு ரன்வீர்ஷா மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நாள்தோறும் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என்றும், வழக்கு நடைபெறும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகி உத்தரவாத ஜாமீன் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி உத்தரவிட்டார்.
இதன்படி, கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ரன்வீர்ஷா வெள்ளிக்கிழமை ஆஜரானார். பின்னர் தனது நிறுவன மேலாளர்கள் இருவரை ஜாமீன்தாரர்களாக காட்டி, ரூ. 1 லட்சம் ஜாமீன் தொகைக்கான பத்திரத்தையும் ரன்வீர்ஷா வழங்கினார்.