மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால், அணையின் நீர்மட்டம் வேகமாகச் சரிந்து வருகிறது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 117 கன அடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து, திங்கள்கிழமை காலை 116 கன அடியாகக் குறைந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 11,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ள நிலையில், பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாகச் சரிந்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 82.13 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், திங்கள்கிழமை காலை 81.20 அடியாகச் சரிந்தது. அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு அடி வீதம் சரிந்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 43.16 டி.எம்.சி.