மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதியே தரவில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தமிழக அரசு மனு அர்த்தமற்றது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல்
மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதியே தரவில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு


புதுதில்லி: மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தமிழக அரசு மனு அர்த்தமற்றது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளது.

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்க அளிக்கப்பட்ட அனுமதிக்குத் தடை கோரி தமிழக அரசு கடந்த நவம்பர் 30-ஆம் தேதியும், புதுச்சேரி அரசு டிசம்பர் 8-ஆம் தேதியும் மனு தாக்கல் செய்தன. மேலும், மத்திய, கர்நாடக அரசுகளுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி தொடுத்தது.

தமிழகம், புதுச்சேரி அரசுள் தாக்கல் செய்த மனுக்களில், மேக்கேதாட்டு அணை, குடிநீர்த் திட்டம் ஆகியவை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு கர்நாடக அரசின் காவிரி நீர்வாரி நிகம் நிறுவனத்துக்கு மத்திய நீர் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி அளித்துள்ள அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த அனுமதி தொடர்பான கடிதத்தை மத்திய நீர் ஆணையம் திரும்பப் பெறவும் உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வில் டிசம்பர் 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அளித்துள்ள அனுமதிக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், இது தொடர்பாக தமிழக அரசின் மனுக்களுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ள மனுவில், மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கவே மட்டுமே அனுமதி அளித்துள்ளோம். இந்த அனுமதி என்பது அணை கட்டுவதற்காக கொடுக்கப்பட்ட அனுமதி கிடையாது. எனவே, இது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானது அல்லது. தீர்ப்பு அவமதிக்கும் செயலும் அல்ல. 

மேலும் மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பான ஆய்வறிக்கையை தீர ஆராய்ந்து பார்த்து, மத்திய நீர் ஆணையத்தின் நிபுணர்கள் குழு சம்மந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் அந்த தேவைதானா என்பதை தீர ஆராய்ந்து அவர்கள் முடிவெடுத்த பின்னர், அந்த அறிக்கையை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் ஆலோசனை குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.    

பின்னர், அந்த ஒப்புதல் அறிக்கை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். அணை விவகாரம் தொடர்பாக சம்மந்தப்பட்ட மாநிலங்களுடன் கலந்து ஆலோசிக்கப்படும். கர்நாடகாவின் கருத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஆலோசனை நடத்தப்படாது. விவசாயிகளின் நலனுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் எந்த முடிவும் எடுக்கப்படாது. 

எனவே, இப்போது அளிக்கப்பட்டு உள்ள அனுமதி விரிவான திட்ட அறிக்கைக்கு தான். அணை கட்டுவதற்கான அனுமதி அல்ல. தமிழக அரசு தற்போது தாக்கல் செய்துள்ள மனு அர்த்தமற்றது, அவர்கள் மனுவில் கூறம் தகவல்கள் தவறானவை, ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. அதனால் தமிழக அரசு தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு அந்த மனுவில் தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com