கொடநாடு விவகார குற்றவாளிகளுடன் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவுக்கு எப்படி தொடர்பு?: செம்மலை கேள்வி

கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான குற்றவாளிகளுடன் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜாவுக்கு எப்படி ...
கொடநாடு விவகார குற்றவாளிகளுடன் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவுக்கு எப்படி தொடர்பு?: செம்மலை கேள்வி


சேலம்: கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான குற்றவாளிகளுடன் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜாவுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது என்றும் வழக்கின் விவரம் அவருக்கு தெரிந்தது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கும்பல் புகுந்து அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்துடன், மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூரை தாக்கியது. மேலும் அந்தக் கும்பல், அங்கிருந்த சில பொருள்களைத் திருடியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்துக்கு பின்னர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் அருகே கார் விபத்தில் இறந்தார்.

அதேவேளையில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த சயன், விபத்தில் சிக்கி பலத்தக் காயமடைந்தார். இதற்கிடையே கொடநாடு எஸ்டேட் பங்களாவில் காவலாளி ஓம் பகதூரை கொலை செய்து, அங்கிருந்த பொருள்களை திருடியது, ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ் இறந்தது தொடர்பாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ ஒரு விடியோ காட்சி தொகுப்பை புது தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

இந்த விடியோ காட்சியில் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற சம்பவங்களுக்கும், ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் இறந்ததற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்பு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்த விடியோ காட்சி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே இந்த விடியோ காட்சி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு பரப்பும் நோக்கிலும், அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டிருப்பதாகவும், விடியோ காட்சியை வெளியிட்ட மாத்யூ, அந்த விடியோவில் பேட்டியளிக்கும் சயன், மனோஜ் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவின் கீழ் இயங்கும் சைபர் குற்றப்பிரிவு போலீஸார், மாத்யூ, சயன், மனோஜ் ஆகியோர் மீது அவதூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்த எஸ்.பி. செந்தில் குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் இன்று தில்லி விரைந்துள்ளனர். 
 
இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செம்மலை, தெகல்கா பத்திரிகை பெரிய பதவிகளில் உள்ளவர்களை பிளாக்மெயில் செய்து செய்திகள் வெளியிடுவதாக குற்றம்சாட்டியவர், முதல்வர் மீது திட்டமிட்டு வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக தெரிவித்தார். முதல்வர் மீதான குற்றச்சாட்டு பின்னணியில் திமுக இருப்பதாக குற்றம் சாட்டினார்ர்.

மேலும், கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான குற்றவாளிகளுடன் திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது என்றும், வழக்கின் விபரங்கள் அவருக்கு எப்படி தெரிந்தது என்று செம்மலை கேள்வி எழுப்பியுள்ளார். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதே, குற்றவாளி கனகராஜ், சயனை தொடர்பு கொண்டு, கொடநாடு சம்பவத்திற்கு திட்டமிடப்பட்டதாக தெரிவித்த செம்மலை, கொடநாடு விவகாரம் தொடர்பாக திமுகவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க தயாராக உள்ளதாகவும், அதிமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த திமுகவினர் சதி செய்வதாகவும் அவர் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com