திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கார் மரத்தில் மோதியதில் 3 வயதுச் சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் புதன்கிழமை இரவு உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் முத்துசாமி (62). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் தனது மனைவி ஜோதிமணி, மாமனார் நாச்சிமுத்து (75), பேரன் செல்வமித்ரன் (3) ஆகியோருடன் உடுமலையில் உள்ள இளைய மகள் வீட்டுக்கு காரில் புதன்கிழமை சென்றுள்ளார்.
பின்னர், பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு வீடு திரும்பியுள்ளனர். காரை முத்துசாமி ஓட்டிச் சென்றார்.
இவர்களது கார் கொண்டரசம்பாளையம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஜோதிமணி, நாச்சிமுத்து, செல்வமித்ரன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில், பலத்த காயமடைந்த முத்துசாமியை அருகிலிருந்தவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.