மக்களின் பிரச்னைகளை அதிமுக அரசு புரிந்துகொள்ளாமல் உள்ளது என்றார் திமுக மகளிரணி செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி.
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி மக்களின் பிரச்னைகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற கட்சியின் உத்தரவுப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்க உள்ளேன். திராவிட இயக்கங்களின் உழைப்பால் முன்னேறி, அதன் முதுகில் ஏறி சவாரி செய்தவர்கள், பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் திராவிட இயக்கங்களை எதிர்த்து பேசுவது வருந்தத்தக்க ஒன்று.திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்துள்ளார். தற்போது ஊராட்சி சபை கூட்டங்களில் அவர் பங்கேற்பதை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதிமுகவும், பாஜகவும் கூட்டணி சேருவதற்கான அத்தனை வாய்ப்புகளும் உள்ளன. பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில், அதிமுக எதிர்த்து வாக்களிக்காமல் செயல்பட்டதே கூட்டணியை நோக்கி அவர்கள் போய்க்கொண்டு இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. தமிழக அரசு மக்களுடைய பிரச்னைகளை புரிந்துகொள்ளவில்லை. குறைந்தபட்சம் மதுபானக் கடைகளை குறைத்து வந்தால் மக்களுக்கு நல்லது. ஆனால், விற்பனை இலக்கு வைத்து பன்னாட்டு நிறுவனம் போல, அதிமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்தால் அதை ஏற்றுக்கொள்வேன் என்றார் அவர்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த கனிமொழியை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.