திருச்சி: எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கண்ட கனவுகளை தற்போது பிரதமர் மோடிதான் நிறைவேற்றி வருகிறார் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ராணுவ தொழிலக உற்பத்தி வழித்தட திட்டத்தை திருச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்வு முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
திருச்சி மற்றும் ஆவடியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறை நிறுவனங்களை மூடும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை.
ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் சரியான அடிப்படை புரிதல் கூட இல்லாமல் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.
பல்வேறு தொழில் முதலீட்டாளர்களை மத்திய அரசு தமிழகம் நோக்கி அழைத்து வருகிறது. அதனை மாநில அரசு முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழக அரசின் முழு ஒத்துழைப்புடன் திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.
தமிழகத்தின் வளர்ச்சி குறித்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கண்ட கனவுகளை தற்போது பிரதமர் மோடிதான் நிறைவேற்றி வருகிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.