தலைமைச் செயலகத்தில் உள்ள எனது அறையில் யாகம் எதுவும் நடத்தப்படவில்லை. சாமி கும்பிடுவது வழக்கம், அதுபோல வழக்கமான பூஜைதான் நடந்தது என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை அருகேயுள்ள சோழிங்கநல்லூரில் திமுக எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் உறவினர் இல்லத் திருமண விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது ஞாயிறு அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் யாகம் ஒன்று நடத்தியிருப்பதாகவும், என்ன காரணத்தின் பொருட்டு அவர் அந்த யாகத்தை நடத்தினார் என கேள்விகள் எழுவதாகவும் அவர் பேசி இருந்தார்.
மு.க. ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு மதுரை விமான நிலையத்தில் ஓ. பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, யாகம் நடத்தினால் முதல்வராகலாம் என்ற மூட நம்பிக்கையை ஸ்டாலின் நம்புகிறாரா? யாகம் நடத்தினால் முதல்வராக முடியும் என்றால் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் யாகம் நடத்தலாமே? பொதுவாக ஸ்டாலின் சமீபகாலமாக என்ன செய்வது என்றே தெரியாமல் குழம்பி உள்ளார்.
என்ன செய்தால் அரசியல் லாபம் கிடைக்கும் என்று தெரியாமல் குழம்பிப்போய் உள்ளார். எனது அறையில் யாகம் எதுவும் நடத்தவில்லை. சாமி கும்பிடுவது வழக்கம். அதுபோலத்தான் எனது அறையில் பூஜை நடந்தது என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார்.