சென்னை: யாகம் வளர்த்தால் ஒருவர் முதல்வராகிவிட முடியுமா என்று அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில், மீனவர்களுக்கு மானிய விலையிலான 27 இருசக்கர வாகனங்களை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். அதைத் தொடர்ந்து, மீன்வளம் குறித்த 15 ஆயிரம் நூல்கள் கொண்ட நூலகத்தையும் அவர் திறந்துவைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரிக்க முடியாத மாபெரும் இயக்கமாக அதிமுக இருக்கும் என்றும், யாகம் வளர்த்தால் ஒருவர் முதல்வராகிவிட முடியுமா என கேள்வி எழுப்பிய ஜெயகுமார், எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணை கேட்கும் அளவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்றுவிட்டதாகவும், தலைமைச் செயலகத்தில் ஊதுபத்தி கொளுத்தியதற்கு கூட ஸ்டாலின் சிபிஐ விசாரணை கேட்பாரா? என விமர்சித்தார்.
மேலும் கொடநாடு விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு திமுக அடைக்கலம் கொடுப்பது அம்பலமாகிவிட்டதாகவும், பத்திரிகையாளர் மேத்யூ, சயான் மற்றும் மனோஜ் ஆகியோருடன் திமுகவுக்கு உள்ள தொடர்பு குறித்து, விசாரணையில் தெரியவரும் என்றார்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நிதி நிலை சீரானதும், ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ஜெயகுமார் உறுதியளித்தார்.