இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன.25) லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது: இந்திய பெருங்கடல் பகுதியில்
காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளது. இதன்காரணமாக, கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் வரும் 25-ஆம் தேதி லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வறண்ட வானிலை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதன்கிழமை(ஜன.23), வியாழக்கிழமை (ஜன.24) ஆகிய இரண்டு நாள்களில் வறண்ட வானிலை காணப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை இரவு உறைபனி காணப்படும். சென்னையில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும் என்றார் அவர்.