வன விலங்குகள் தாக்குவதை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
வன விலங்குகள் மனிதர்களைத் தாக்குவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் திராவிடமணி பேசும்போது, கூடலூர் தொகுதியில் வனவிலங்குகளால் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் என்று குறிப்பிட்டார். அப்போது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குறுக்கிட்டு கூறியது:
வன விலங்குகள் மனிதர்களை தாக்குவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வன விலங்குகளால் உயிரிழந்தோருக்கு திமுக ஆட்சியில் ரூ.1 லட்சம்தான் நிவாரணம் கொடுக்கப்பட்டது. இப்போது ரூ.4 லட்சம் நிவாரணம் தருகிறோம். யானைகள் தாக்குதலை தடுக்க அகழிகள் வெட்டுகிறோம். குடிநீருக்காக மிருகங்கள் வனத்தைவிட்டு வெளியேறாத வகையில், குடிநீர் தொட்டிகளை அமைத்துள்ளோம் என்றார்.