சென்னை: தமிழகத்தில் இடைவேளை விட்டிருந்த தென்மேற்குப் பருவ மழை ஜூலை 9க்குப் பிறகு சூடுபிடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, தமிழகம் மற்றும் சென்னையில் ஜூலை 9ம் தேதி முதல் டமால் டுமீல் மழை பெய்யும்.
தென்மேற்குப் பருவ மழை இடைவேளை விடுவது இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் நல்ல செய்தி அல்ல. ஆனால் தமிழ்நாட்டுக்கு நல்ல செய்தியாகவே அமைந்துள்ளது. எப்போதெல்லாம் தென்மேற்குப் பருவ மழை இடைவேளை விடுகிறேதா, அப்போது தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வெப்பச் சலனத்தால் மழை சூடுபிடிக்கும்.
2017ம் ஆண்டு தென்மேற்குப் பருவ மழை இடைவேளை விட்டிருந்த போது ஆகஸ்ட் - செப்டம்பரில் வட தமிழகத்தில் பெய்த மழையை யாரால் மறந்திருக்க முடியும்?
எனவே ஜூலை 9ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் பெய்யும் மழைக்காக காத்திருப்போம்.
உத்தரப்பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், டார்ஜிலிங் ஆகிய பகுதிகள் மீது அடுத்த வாரம் முழுக்க ஒரு கண்ணை வைத்திருக்க வேண்டும். இப்பகுதிகளில் மிகக் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை மும்பைக்கு அருகே மிக மெதுவாக நகர்வதால், மும்பை கடற்கரைப் பகுதிகளில் இன்று மாலை முதல் நாளை வரை மிகப் பலத்த மழை பெய்யும்.
அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு பகுதிகளில் மழை பெய்தால், நாட்டின் பிற பகுதிகளில் வானிலை வறண்டு காணப்படும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.