கஜா புயல் பாதிப்புக்குள்ளான நான்கு மாவட்டங்களில் 28 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு திமுக உறுப்பினர் மதிவாணன் இதுதொடர்பான பிரச்னையை எழுப்பினார். இதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துப் பேசியது:
கஜா புயலால் பாதித்த பகுதிகளில் வீடுகள் கட்டும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 766 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளும், திருவாரூரில் 9 ஆயிரத்து 786 வீடுகளும், புதுக்கோட்டையில் 3 ஆயிரத்து 942 வீடுகளும் கட்டித் தரப்பட உள்ளன. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் மொத்தமாக 28 ஆயிரத்து 671 வீடுகள் தனி வீடுகளாகவும், அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் விரைவில் வழங்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.