சிவகங்கை மாவட்டம் திருப்பத்துரில் உள்ள அரசுடைமை வங்கியில் விதிகளை மீறி மகளிர் சுய உதவிக்
குழுக்களுக்கு ரூ.6.14 கோடி கடன் வழங்கியதாக முன்னாள் வங்கி மேலாளார்கள் உள்பட 3 பேரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
இந்த வங்கியின் வாராக்கடன்கள் குறித்து அண்மையில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, கடந்த 2010 -ஆம் ஆண்டு முதல் 2012 -ஆம் ஆண்டு வரையில் திருப்பத்தூர் பகுதியில் உள்ள சுமார் 288 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி விதிமுறைகளை மீறி ரூ.6 கோடியே 14 லட்சத்து 46 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அந்த பணம் முழுவதும் வசூலாகாமல் இருந்ததால் விசாரணை செய்யப்பட்டது.
விசாரணையில், அப்போது (2010-2012) வங்கியின் முதன்மை மேலாளர்களாகப் பணியாற்றிய பிரேம்குமார் (6) மற்றும் நேரு (58), அதே பகுதியில் செயல்பட்டு வந்த அன்னம் தொண்டு நிறுவனத்தின் செயலர் தமிழ்செல்வி (45) ஆகியோர் சேர்ந்து வங்கி விதிமுறைகளை மீறி மகளிர் குழுக்களுக்கு ரூ.6 கோடியே 14 லட்சத்து 46 ஆயிரம் கடனுதவி வழங்கியது தெரிய வந்தது.
இது குறித்து காரைக்குடியில் உள்ள அவ்வங்கியின் மண்டல மேலாளர் லெட்சையா, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதனிடம் அண்மையில் புகார் அளித்தார்.
இதையடுத்து, மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தொண்டு நிறுவனத்தின் செயலர் தமிழ்செல்வி, வங்கியின் முன்னாள் முதன்மை மேலாளர்கள் பிரேம்குமார், நேரு ஆகிய 3 பேரையும் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.