சிலை கடத்தல் வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

 சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்
சிலை கடத்தல் வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு


 சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்த மனுவில், உயர்நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் சிலை கடத்தல் வழக்குகளில் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால்,  இந்த விசாரணையில் ஒரு அமைச்சரும், காவல்துறை டிஜிபியும் தலையிடுகின்றனர். கடந்த 2017-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, அனைத்து மாவட்டங்களிலும் நிலுவையில் உள்ள சிலை கடத்தல் வழக்குகளை கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். ஆனால், இதுவரை அந்த வழக்குகள் மாற்றப்படவில்லை.சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு, 3 லட்சம் சிலைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், இதற்காக தமிழக அரசு எந்தவொரு வசதிகளையும் செய்து தரவில்லை. நான் சிறப்பாகப் பணியாற்றுவதைத் தடுக்கவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் அதிகாரிகள் தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். எனவே தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வில்  வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.  அப்போது அரசு தரப்பில் ஆஜரான, அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.ஹெச். அரவிந்த் பாண்டியன், உச்ச நீதிமன்றத்தில் தான் இதுதொடர்பாக  நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்ய முடியும். எனவே இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை எனக்கூறி வாதிட்டார்.  இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிலை கடத்தல் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த தமிழக அரசுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டது. ஆனாலும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் அமல்படுத்தப்படவில்லை. எனவே, சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். தாக்கல் செய்யப்படும் அறிக்கை திருப்தியளிக்காவிட்டால், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், தமிழக காவல்துறை டிஜிபி, கூடுதல் டிஜிபி ஆகியோரை நேரில் ஆஜராக  நீதிமன்றம் உத்தரவிடும் என தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com