ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக  மாற்ற வேண்டிய அவசியம் என்ன?: உயர்நீதிமன்றம் கேள்வி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை மக்கள் வரிப் பணத்தில் நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக  மாற்ற வேண்டிய அவசியம் என்ன?: உயர்நீதிமன்றம் கேள்வி


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை மக்கள் வரிப் பணத்தில் நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை அதிமுக நிர்வாகியான புகழேந்தி  தாக்கல் செய்த மனுவில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் 
உள்ளன. 
ஹைதராபாதில் திராட்சை தோட்டம், பங்களா, சென்னை போயஸ் தோட்ட இல்லம், கொடநாடு எஸ்டேட் என ரூ.913 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன. இந்தச் சொத்துகளை நிர்வகிக்க தனியாக ஒரு நிர்வாகியை உயர்நீதிமன்றமே நியமிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
 இந்த வழக்கு விசாரணையின்போது, வருமான வரித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பதில் மனுவில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி, செல்வ வரி பாக்கித் தொகைக்காக அவரது போயஸ் தோட்ட இல்லம், ஹைதராபாத் பங்களா உள்ளிட்ட சில சொத்துகளை முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசு சார்பில் நினைவிடமாக மாற்றுவதற்கு, ஜெயலலிதாவின் உறவினர்களான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இல்லத்தை ரூ.35 கோடிக்கு எடுப்பதாக அரசு அறிவித்துள்ளதை ஏற்க முடியாது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆட்சேப மனு அளிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. 
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதாவின் பெயரையும், புகழையும் நிலைக்க வைக்க எத்தனையோ வழிகள் உள்ளன. அமைச்சர்கள் கூட தங்களது உரையைத் தொடங்குவதற்கு முன்பாக அவரை புகழ்ந்து விட்டுத்தானே பேசத் தொடங்குகின்றனர்.
 மக்களின் வரிப் பணத்தில் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன, அவர் வசித்தார் என்பதற்காக கொடநாடு இல்லத்தையும் நினைவு இல்லமாக மாற்றுவீர்களா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அனைத்து தரப்பு வாதங்களுக்காகவும் இந்த வழக்கின் விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com