தமிழக காங்கிரஸ் கட்சியினர் கிராமப்புறங்களில் உள்ள குளங்களைத் தூர்வார வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் வரலாறு காணாத கடும் வறட்சி காரணமாக குடிநீர் பஞ்சத்தில் தமிழக மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பிரச்னையைத் தீர்க்க வேண்டுமானால் தமிழக ஆட்சியாளர்கள் தொலைநோக்குப் பார்வையோடு நிதி ஒதுக்கி, திட்டங்களைத் தீட்டியிருக்க வேண்டும். அந்த வகையில் குடிநீர் பஞ்சத்தைப் போக்குவதில் அதிமுக அரசு முழு தோல்வியடைந்துவிட்டது.
சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம், தேவந்தவாக்கம் கிராமத்தில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தை ரூ.10 லட்சம் செலவில் காங்கிரஸ் கட்சியினர் தூர்வாரியுள்ளனர். இந்தப் பணிக்கு அந்தப் பகுதி மக்களிடையே அமோக வரவேற்பு காணப்பட்டது.
எனவே, தமிழகத்தில் குடிநீர் பிரச்னையைப் போக்குவதற்கு 72 மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் தங்கள் மாவட்டத்தில் ஏதாவது ஒரு குளத்தைத் தேர்வு செய்து தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும். ஜூலை 15-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் ஏதாவது ஒருநாளில் தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.