கோயில் திருப்பணியில் ஈடுபடுவோர் மீது உரிய ஆதாரமின்றி வழக்குப் பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கையில் காவல் துறை ஈடுபடக் கூடாது என மடாதிபதிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கோயில்களில் உள்ள சிலைகள் கடத்தல் தொடர்பாக காவல் துறை எடுத்து வரும் நடவடிக்கை குறித்து இந்து ஆச்சார்ய சபா மற்றும் துறவியர் பேரவை சார்பில் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட மடாதிபதிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பழைமையான கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு வரும் பணியில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.
அதேவேளையில், ஆன்மிகத்தில் நாட்டமுள்ள தொழிலதிபர்கள், பெரியோர்கள் ஆயிரக்கணக்கான கோயில்களைப் புனரமைத்து பராமரிக்க உதவி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கோயில் திருப்பணிகளில் ஈடுபடுவோர் மீது உரிய ஆதாரமின்றி வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் தொடருகின்றன. இதனால், கோயில் பணிகளில் ஈடுபடுவோர் அச்சமடைந்துள்ளனர். இது கோயில் திருப்பணிகளில் பெரிய சுணக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, கோயில் திருப்பணியில் ஈடுபடுவோர் மீது உரிய ஆதாரமின்றி வழக்குப் பதிவு செய்தல் போன்ற நடவடிக்கையில் காவல் துறை ஈடுபடக் கூடாது என வலியுறுத்தினர்.
இந்தச் சந்திப்பில், வடலூர் ஊரன் அடிகளார், சாந்தலிங்க மருதாசல அடிகளார், இந்து ஆச்சார்ய சபாவின் தலைவர் சாந்தா சுவாமிகள், சங்கரலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், குமரகுருபர சுவாமிகள், சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள், சுந்தரேச சுவாமிகள், தேசிக சுவாமிகள், தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தயானந்த சந்திரசேகர சுவாமிகள், சிவசண்முக ஆறுமுக மெய்ஞான சிவாசாரிய சுவாமிகள், குகை நமச்சிவாயம் சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.