ஊதிய உயர்வு, பணியிட நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் பி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களின் பணியிடங்களை குறைக்கக் கூடாது. மருத்துவப் பட்டமேற்படிப்பு முடித்தவர்களை கலந்தாய்வு மூலம் மட்டுமே பணிநியமனம் செய்ய வேண்டும்.
மருத்துவப் பட்டமேற்படிப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் ஏற்கெனவே இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டைத் திரும்ப கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால், அதன்பேரில் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்கட்டமாக சென்னை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு மருத்துவர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு மருத்துவர் சங்கங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து வரும் 12ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் தர்னாவில் ஈடுபட உள்ளோம். 15ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க இருக்கிறோம்.
சுகாதாரத் துறையின் மானியக் கோரிக்கையின்போது எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை என்றால், வரும் 18ஆம் தேதி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகளுக்கான சிகிச்சையைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.