சென்னை: நாம தப்பு செய்ய பயப்படுறதே ஜெயிலுக்குப் போயிடுவோமோன்னுதான். ஆனால் இங்கே ஒருவர் ஜெயிலுக்குப் போவதற்காகவே தப்பு செய்கிறாராம்.
இப்போ தண்டனை எல்லாம் ட்ரீட்மென்டா மாறிடிச்சா என்ற வடிவேலுவின் வசனத்தை மறக்க முடியாமல் செய்துள்ளார் தாம்பரத்தைச் சேர்ந்த
ஞானப்பிரசாரம் (51).
கடந்த மாதம் சிசிடிவி கேமராவைத் திருடிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஞானப்பிரகாசம் கடந்த வாரம்தான் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
வெளியே வந்து மனம் திருந்தி வாழ்வார் என்று எதிர்பார்த்தால், வெளியே வந்த கையோடு சுடச்சுட ஒரு பைக்கைத் திருடிக் கொண்டு ஊர் சுற்றியுள்ளார். ஆனால் அந்த பைக்கைத் திருடியதற்காக அவர் கைதாகவில்லை. அந்த பைக்குக்காக மற்றொரு பைக்கில் இருந்து பெட்ரோல் திருடும் போது கையும் களவுமாக சிக்கியுள்ளார் ஞானப்பிரகாசம்.
ஏன் இப்படி தப்புக்கு மேல் தப்பு செய்து மாட்டிக் கொள்கிறீர்கள் என்று காவல்துறை கேட்டதற்கு அவர் சொன்ன பதில்தான் இன்றைய ஹைலைட்ஸ்.
வாருங்கள் அவர் என்ன சொல்கிறார் என்று கேட்கலாம்..
"எனக்கு வேலை இல்லாததால், என்னை வீட்டில் யாரும் மதிக்கவில்லை. என்னை மதிக்காத வீட்டில் நான் எப்படி இருக்க முடியும். அதுதான் வெளியே வந்துவிட்டேன். ஆனால், ஜெயில்ல அப்படியில்லை. நல்லா கவனிச்சிக்கிறாங்க, நேரத்துக்கு சாப்பாடும் போடுறாங்க. அதுவும் நல்ல சாப்பாடு" என்று கூறி காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நின்ற காவல்துறையினர், ஞானப்பிரகாசத்தை தற்போதைக்குக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர், வெளியே வந்து அடுத்து என்ன செய்வாரோ என்ற கேள்வியோடு.