தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று (வியாழக்கிழமை) மாநிலங்களவையில் பதிலளித்தார்.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புத்தை அடுத்துள்ள ராமகிருஷ்ணாபுரம் அம்பரப்பர் மலையில், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணிகளை கடந்த 2015, ஜனவரி மாதம் மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்த நிலையில், நியூட்ரினோ ஆய்வகம் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், "தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்தியாவில் அமையும் முதல் நியூட்ரினோ ஆய்வகம். இந்த ஆய்வகம் 2 கி.மீ மலையைக் குடைந்து அமைக்கப்படவுள்ளது. இதனால், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இல்லை, கதிர்வீச்சு அபாயமும் கிடையாது" என்று விளக்கமளித்துள்ளார்.
இந்த திட்டத்துக்கு தமிழகத்தில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியும் மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.