தொற்றா நோய்களால் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

தொற்றா நோய்களின் தாக்கம் சமூகத்தில் அதிகரித்து வருவது தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற அப்பல்லோ மருத்துவமனை - சாம்சங் நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் அதி நவீன மருத்துவ வாகனத்தைத் தொடங்கி வைத்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
சென்னையில் நடைபெற்ற அப்பல்லோ மருத்துவமனை - சாம்சங் நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் அதி நவீன மருத்துவ வாகனத்தைத் தொடங்கி வைத்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.


தொற்றா நோய்களின் தாக்கம் சமூகத்தில் அதிகரித்து வருவது தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.
அந்த வகையான நோய்களைத் தடுக்க ஒருங்கிணைந்த விழிப்புணர்வு நடவடிக்கை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அப்பல்லோ மருத்துவமனை மற்றும் சாம்சங் நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ வாகனத்தின் அறிமுக விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.  
ஊரகப் பகுதிகளில் மருத்துவ சேவை அளிக்கும் நோக்கில் அந்த வாகனம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் அதி நவீன மருத்துவ சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன என அப்பல்லோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, அந்த நடமாடும் மருத்துவ வாகனத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது:
அனைவருக்கும் மருத்துவ சேவைகள் கிடைப்பது அவசியம். குறிப்பாக, கிராமப் புறங்களில் மருத்துவ வசதிகள் சென்றடைய வேண்டும். அதற்கு இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களின் தாக்கம் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. 
உலக அளவில் அந்த வகை நோய்களால் 1.5 கோடி பேர் உயிரிழப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இந்தியாவில் விநாடிக்கு 10 பேர் தொற்றா நோய்களுக்கு பலியாகின்றனர். 
அவர்களில் 85 சதவீதம் பேர் நடுத்தர வகுப்பையும், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பையும் சேர்ந்தவர்கள் என்பது வருத்தத்துக்குரிய விஷயம். 
அவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் இளைஞர்கள் என்பதும் வலி நிறைந்த உண்மையாக உள்ளது. இதனால், நாட்டின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது; பொருளாதார வளர்ச்சியில் தடை ஏற்படுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும்.
தொற்றா நோய்களை முதலிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் 80 சதவீதம் பேரை உயிரிழப்பிலிருந்து காப்பாற்ற முடியும். 
ஆனால், அதற்கு உரிய விழிப்புணர்வு அவசியம். பெருகி வரும் நகரமயமாக்கத்தினாலும், வாழ்க்கை முறை மாற்றத்தாலும் தான் தொற்றா நோய்களுக்கு பலர் ஆளாகின்றனர். 
புகை, மது, துரித உணவுகள் என உடலுக்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் நோய்களைத் தேடிப் பெற்றுக் கொள்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க உடல் பருமன் இன்றைக்கு பரவலாகக் காணப்படுகிற ஒரு நோயாக விளங்குகிறது. போதிய உடற்பயிற்சி இல்லாததே அதற்கு முக்கிய காரணம். 
ஆரோக்கியமான வாழ்வுக்கு முறையான உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் வேண்டும். 
நோய்கள் வந்த பிறகு மருத்துவரை நாடிச் செல்வதை விட அவை வராமல் தடுப்பதற்கான வழிகளை பேண வேண்டும் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி, இணை மேலாண் இயக்குநர் சங்கீதா ரெட்டி, சாம்சங் நிறுவன (சென்னை) மேலாண் இயக்குநர் ஜே யங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com