சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்புகள்: பேரவைத் தலைவருடன் திமுக வாக்குவாதம்

சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் அறிவிப்புகளை வெளியிடுவது தொடர்பாக பேரவைத்  தலைவர் பி.தனபாலுடன், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை  விதி எண் 110-இன் கீழ்  புதிய திட்டங்களை அறிவித்து உரையாற்றிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை  விதி எண் 110-இன் கீழ்  புதிய திட்டங்களை அறிவித்து உரையாற்றிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.


சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் அறிவிப்புகளை வெளியிடுவது தொடர்பாக பேரவைத்  தலைவர் பி.தனபாலுடன், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் நிறைவடைந்ததும், பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி சில துறைகளுக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் நன்றி தெரிவிக்க எழுந்தனர்.
அப்போது, திமுக உறுப்பினர் ஆஸ்டின் எழுந்து, ஒழுங்குப் பிரச்னை ஒன்றை எழுப்பி சில கருத்துகளைத் தெரிவித்தார். அவர் பேசிய கருத்துகளை அவைத் தலைவர் பி.தனபால் அவைக் குறிப்பில் இருந்து நீக்கினார். இதைத் தொடர்ந்து, நடந்த விவாதம்:
துரைமுருகன்: சட்டப் பேரவையில் ஒரு பிரச்னை குறித்து கேள்வி எழுப்பவும், விளக்கம் கேட்கவும் உரிமை உண்டு. ஆனால், அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவது சரியாக இருக்காது.
பேரவைத் தலைவர் தனபால்: 110 விதியில் முதல்வர் பேசும்போது யாரும் அதில் குறுக்கிட கூடாது. விமர்சிக்கக் கூடாது என்று விதி உள்ளது. அதுபற்றி யாரும் விவாதிக்கக் கூடாது. எனவே அவர் (ஆஸ்டின்) குறிப்பிட்டதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி இருக்கிறேன்.
துரைமுருகன்: முதல்வர் 110 விதியின்கீழ் அறிவிப்பதை மற்ற அமைச்சர்கள் பாராட்டி பேசுகிறார்கள். ஆனால், ஒரு உறுப்பினர் கருத்துச் சொல்லக் கூடாது என்பதை ஏற்க முடியாது. 110 விதியின் கீழ் ஒரு பொருள் பற்றி மட்டும்தான் பேச வேண்டும் என்று உள்ளது. ஆனால், முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறார். அதை சுட்டிக்காட்டும் வகையில்தான் அவர் ஒழுங்குப் பிரச்னையைக் கொண்டு வந்தார்.
பேரவைத் தலைவர்: 110 விதியின் கீழ் முதல்வர் பேசியதற்கு பாராட்டு தெரிவிக்கலாம் என்று நான் ஏற்கெனவே உத்தரவிட்டிருக்கிறேன். அதை ஏற்க வேண்டும். விமர்சிக்கக் கூடாது.
துரைமுருகன்: நீங்கள் சொல்வதை மறுக்கவில்லை. ஒழுங்குப் பிரச்னை தொடர்பாக தெரிவித்த கருத்துகளை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம். ஆனால், அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி இருக்கக் கூடாது.
மு.க.ஸ்டாலின்: விதிமுறையைச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான் எங்கள் உறுப்பினர் அதை கூறினார். அவருடைய உரிமை மறுக்கப்படக் கூடாது.
பேரவைத் தலைவர்: முதல்வருக்கு நன்றி தெரிவித்து மட்டும் பேசலாம். விமர்சிக்கக் கூடாது என்ற எனது உத்தரவை மீறியதால் தான் அவரது பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
துரைமுருகன்: அவை நடைபெறும்போது அது திசை மாறி விடக்கூடாது என்பதற்காக தான் உறுப்பினர்கள் ஒழுங்குப் பிரச்னை கொண்டு வந்து அதை சுட்டிக்காட்டுகிறார்கள். அந்த உரிமை உறுப்பினர்களுக்கு உண்டு. இதை அவைத் தலைவர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பேரவைத் தலைவர்: உறுப்பினர்களின் உரிமையைக் காப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பேரவை விதி 110-இன் கீழ் அறிக்கை படிக்கும் போது அதை விமர்சிக்கக் கூடாது. வரவேற்று கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மீண்டும் நினைவுபடுத்துகிறேன். 
இதில் விவாதத்துக்கு எந்த இடமும் இல்லை என்றார். இதையடுத்து இந்த விவாதம் முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com