ஆன்மிகச் சுற்றுலாவாக.. அத்திவரதரை தரிசிக்கச் செல்வோர் கவனத்துக்கு!

தமிழகத்தின் தற்போதைய பெரும்பாலான மக்களின் ஒரே கேள்வி அத்திவரதரை தரிசித்துவிட்டீர்களா? என்பதுதான்.
ஆன்மிகச் சுற்றுலாவாக.. அத்திவரதரை தரிசிக்கச் செல்வோர் கவனத்துக்கு!

தமிழகத்தின் தற்போதைய பெரும்பாலான மக்களின் ஒரே கேள்வி அத்திவரதரை தரிசித்துவிட்டீர்களா? என்பதுதான்.

அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். பொது வாகனத்திலோ, சொந்த வாகனத்திலோ, வாடகைக்கு வாகனத்தை எடுத்துக் கொண்டோ காஞ்சிபுரம் செல்பவர்களும், ஆன்மிகச் சுற்றுலாவாக ஏராளமானோர் ஒரே பேருந்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு காஞ்சிபுரம் செல்பவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள்.

இவர்களுக்கான ஒரு முக்கிய விஷயத்தை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
அதாவது, சொந்த வாகனமாக இருந்தாலும் சரி, வாடகைக் எடுத்துக் கொண்டு செல்லும் வாகனமாக இருந்தாலும் சரி, நாம் செல்லும் வாகனத்தின் பதிவெண் மற்றும் அடையாளங்களை பக்தர்கள் நன்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அங்கே நிற்கும் ஆயிரக்கணக்கான வாகனத்தில் நாம் வந்த வாகனம் எது என்பதை மறந்துவிட்டால் பிறகு தேடுவது எப்படி?

மற்றொன்று, வாகன ஓட்டுநரின் செல்பேசி எண்ணை பக்தர்கள் ஒவ்வொருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவரும் தங்கள் கையில் கூட எழுதி வைத்துக் கொள்ளலாம்.  வாகன எண்ணையும் கூட.

அதேப்போல, பக்தர்கள் செல்லும் வாகனம் எந்த பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படுகிறது, அந்த பேருந்து நிலையத்துக்கு திரும்ப வருவது எப்படி, ஆட்டோவாக இருந்தால் அதற்கு எவ்வளவு கட்டணம் என்பதையும், நமது வாகனம் வாகன நிறுத்துமிடத்தில் எங்கே நிறுத்தப்படுகிறது என்பதையும் நன்கு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பேருந்து நிறுத்தத்தின் அடையாளங்களையும் ஒரு முறை சுற்றிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பக்தர்களின் வசதிக்காக காஞ்சிபுரம் நகர எல்லையில் உள்ள ஓரிக்கை, ஒலிமுகமதுபேட்டை, பச்சையப்பன் கல்லூரி வளாகம் ஆகிய மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது பேருந்து நிறுத்தம். இதையும் கவனத்தில் வைக்கவும்.

அதேப்போல, பக்தர்கள் தங்களது கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தும் இடங்களாக, பச்சையப்பன் கல்லூரி மைதானம், திருவீதிபள்ளம், லாலா தோட்டம், ஒளிமுகமதுபேட்டை ஆகிய 4 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பக்தர்கள் தாங்கள் இறங்கியதும், அத்திவரதரைக் காண வேண்டும் என்ற ஆவலில், வேகவேகமாக மினிப் பேருந்தை பிடித்து கோயிலுக்குச் சென்றுவிட்டால், மீண்டும் எந்த பேருந்து நிலையத்துக்கு வர வேண்டும், நாம் வந்த வாகனம் எங்கே நிறுத்தப்பட்டிருக்கிறது என்பதை அறியாமல் அலைய வேண்டியது ஏற்படும்.

அத்தி வரதரைக் காண ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்..! http://bit.ly/321qvuh

வாகனத்தில் இருந்து இறங்கியதும், முதலில் அந்த வாகன நிறுத்துமிடத்தின் பெயர் என்ன, எப்படி திரும்பி வருவது என அனைத்தையும் கேட்டறிந்து கொள்ள வேண்டும். ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் சென்றவர் அதைப் பார்த்துக் கொள்வார் என்று நம்பிச் செல்ல வேண்டாம். ஏன் என்றால், கோயிலில் இருக்கும் கூட்ட நெரிசலில், ஒருவரை ஒருவர் பின்தொடர்ந்து செல்வது ஆக முடியாதக் காரியம். எனவே, ஒவ்வொருவரும் அவரவர்களை பத்திரமாகப் பார்த்து, பத்திரமாக வாகன நிறுத்துமிடத்தை வந்தடைவதை உறுதி செய்து கொள்வதே உங்களுக்கும், உங்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதருக்கும் நன்மை பயக்கும்.

ஏன் என்றால், வாகன நிறுத்துமிடத்தை மறந்துவிட்டு நாம் தொலைந்து போனால், அத்திவரதரை தரிசிக்கச் சென்று காணாமல் போனதாக அவர் மீதல்லவா பழி சென்றுச்சேரும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com