மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் பட்ஜெட் விவாதத்தில் திமுக வலியுறுத்தியது.
மாநிலங்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற பொது பட்ஜெட் விவாதத்தில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசியதாவது:
பட்ஜெட்டில் மூன்று கோடி சில்லறை வர்த்தகர்கள், சிறு கடைக்காரர்களுக்கு புதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியப் பலன்களை நீட்டிக்க அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது; பாராட்டுக்குரியது. எனினும் சில கசப்பான விஷயங்களும் உள்ளன. 2014-இல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சில வாக்குறுதிகள் தேர்தலில் அளித்திருந்தீர்கள். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஐந்து ஆண்டுகள் ஆட்சி முடியும் போது 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்க வேண்டும். ஆனால், அதுபோன்று ஏதும் இல்லை. இரண்டாவதாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணம் ஏதும் வெளிவரவில்லை. மாறாக மக்கள் தர்மசங்கடத்திற்கு உள்ளாகினர். நூற்றக்கணக்கான மக்கள் தெருக்களில் இறக்க நேர்ந்தது. மூன்றாவதாக வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டு நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் ரூ.15 லட்சம் அளிக்கப்படும் என கூறப்பட்டது. அதுபோன்று பணம் ஏதும் கொண்டு வரப்படவில்லை. ஜிஎஸ்டி வரி முறையும் கசப்பான அனுபவத்தையே அளித்தது.
செய்தித்தாளுக்கு 10 சதவீதம் வரி, அச்சடிக்கப்பட்ட நூல்களுக்கு 5 சதவீதம் வரி, குடிநீர் பிளாக்கிங் குழாய்களுக்கு 20 சதவீதம் வரி, செராமிக் கூரை ஓடுகளுக்கு 10-இல் இருந்து 15 சதவீதம் வரி , ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தயாரிப்புகளுக்கு 5-இல் இருந்து 7.5 சதவீதம் வரி, பின்பக்க காண்பு கண்ணாடிகளுக்கு 10-இல் இருந்து 15 சதவீதம் வர என சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய்க்கான விலை உயர்த்தப்பட்டால் இதரப் பொருள்களின் விலைகள் உயரும் என்பது ஒவ்வொருக்கும் தெரியும். இவை நாம் எதிர்கொள்ளப் போகும் பெரிய விஷயமாகும். அதேபோன்று, சாமானிய மனிதர்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கும் சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளது. கார்ப்பரேட், அந்நிய நேரடி முதலீடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் பட்ஜெட்டாக உள்ளது. அதேவேளையில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் சில ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கும் போது அதை ஏன் தள்ளுபடி செய்யக் கூடாது? என்றார் அவர்.