திருச்சி மலைக்கோட்டை ராணி மங்கம்மாள் மண்டபத்தில் சிலை திருடிய கும்பலைச் சேர்ந்த நபர் நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஐம்பொன் உற்சவர் சிலை தயாரிப்பில் முறைகேடு மற்றும் மூலவர் சிலையை மாற்றுவதற்காக செய்யப்பட்ட திட்டங்கள் குறித்து, விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் தலைமையிலான 1 ஏடிஎஸ்பி., 5 டி.எஸ்.பி. மற்றும் ஆய்வாளர்கள் பழனியில் கடந்த வியாழக்கிழமை முதல் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மலைக்கோட்டை ராணி மங்கம்மாள் மண்டபத்தில் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் சுமார் 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி ராம்குமார் கிருஷ்ணன் நேபாள எல்லையில் பிடிபட்டுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு திருச்சி மலைக்கோட்டை ராணி மங்கம்மாள் மண்டபத்தில் 31 சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு, 21 சிலைகள் மீட்கப்பட்டன.
இதில், 6 ஆவது குற்றவாளியான தலைமறைவாக இருந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா கல்லலைச் சேர்ந்த ராம்குமார் கிருஷ்ணன் (36) என்பவர், நேபாள எல்லை சோனாலியில் சுங்கச்சாவடியில் கைது செய்யப்பட்டார். அவரை, விரைவில் கும்பகோணம் நீதிமன்றத்துக்கு கொண்டு வருவோம் என்றார்.
பின்னர், சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் தெரிவித்ததாவது: தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 20 சிலைகள் குறித்து மட்டுமே உயர்நீதிமன்ற புலனாய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இருபதாயிரம் சிலைகள் வரை காணாமல் போயிருக்க வாய்ப்புள்ளது.
காணாமல்போன நடராஜர் சிலை ஆஸ்திரேலியா அடிலெய்டில் உள்ள "கேலரி ஆப் சதர்ன் ஆஸ்திரேலியா' என்ற அருங்காட்சியகத்தில் உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.30 கோடியாகும். இதை திருப்பித் தர அந்நாட்டு அரசு தயாராக உள்ளது.
இதை கொண்டு வர அனுமதி கேட்டு முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் கடிதம் கேட்டேன். ஆனால், அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை. பின்னர், சிலையை கொண்டு வர உங்களுக்கு ஆர்வமில்லையா எனக் கேட்டவுடன், கடிதம் தந்தார்.
ஆனால், அந்த சிலையை ஆஸ்திரேலிய பிரதமர் தனது சொந்த செலவில் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்.
அப்போது, ஒரு அர்த்தநாரீஸ்வரர் கல் சிலையையும் சேர்த்து வழங்கினார். அது விருத்தகிரீஸ்வரர் கோயிலில் காணாமல்போன சிலையாகும். அந்த சிலை காணாமல் போனதை அறநிலையத் துறை பதிவு செய்யவே இல்லை என்றார்.