மருத்துவக் கலந்தாய்வு: பெற்றோர்கள் திடீர் தர்னா

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும் வெள்ளிக்கிழமை திடீரென தர்னா


மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும் வெள்ளிக்கிழமை திடீரென தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எம்பிபிஎஸ் படிப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்பிசி) மிகக் குறைந்த இடங்களே காலியாக இருந்த நிலையில், கலந்தாய்வுக்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை அழைத்து தங்களை அலைக்கழித்ததாக அவர்கள் அப்போது குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழு அதிகாரிகளும், போலீஸாரும் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து செல்ல வைத்தனர். இதனால், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டுக்கென 3,968 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோன்று பல் மருத்துவக்கான பிடிஎஸ் படிப்புகளுக்கு 1,070 இடங்கள் உள்ளன.
நிர்வாக ஒதுக்கீட்டை எடுத்துக் கொண்டால் தனியார் கல்லூரிகளில் மொத்தம் 852 எம்பிபிஎஸ் இடங்களும், 690 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன. அந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. பொதுக் கலந்தாய்வு தொடங்கிய மூன்று நாள்களிலேயே சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார், கோவை, வேலூர், தஞ்சாவூர், மதுரை, தேனி, திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கரூர், பெருந்துறை ஐஆர்டி உள்பட 24 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள பி.சி, ஓ.சி, இடங்கள் முழுவதும் நிரம்பின.
எம்பிசி பிரிவினருக்கான இடங்களும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக்கு 2,176 பேர் அழைக்கப்பட்டனர். கலந்தாய்வு தொடங்கிய ஒரு சில மணி நேரத்திலேயே எம்பிசி இடங்கள் முழுவதுமாக நிரம்பிவிட்டன. இதனால், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட அப்பிரிவைச் சேர்ந்த பிற மாணவர்கள் அனைவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
இதைக் கேள்விபட்ட சம்பந்தப்பட்ட மாணவர்களும், பெற்றோர்களும் கடும் அதிருப்தியடைந்தனர். தேர்வுக் குழு உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், அதைத் தொடர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சொற்ப இடங்களுக்கு எதற்காக அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை கலந்தாய்வுக்கு அழைக்க வேண்டும் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினர்.
வெள்ளிக்கிழமை நடந்த கலந்தாய்வில் பங்கேற்ற 90 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களும், 104 பேருக்கு தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களும் ஒதுக்கப்பட்டன.
இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழு செயலர் செல்வராஜ் கூறியதாவது:
தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிசி பிரிவினருக்கான பிடிஎஸ் இடங்கள் இன்னும் காலியாக உள்ளன. எம்பிபிஎஸ் இடங்கள்தான் முழுவதும் நிரம்பிவிட்டன. ஒருவேளை, அந்த இடங்களில் சில காலியாகும் பட்சத்தில், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் தகுதியான எம்பிசி மாணவர்களுக்கு அந்த இடங்கள் ஒதுக்கப்படும். கலந்தாய்வில் இடங்கள் நிரம்பும்போது காத்திருப்போர் பட்டியலில் மாணவர்களை வைப்பது வழக்கமான நடைமுறைதான். அதில் எந்த சர்ச்சையும் இல்லை என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com