தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது: கடலோர தமிழகத்தில் காணப்படும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், செஞ்சியில் தலா 110 மி.மீ. மழை பதிவானது. திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 10 மி.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர், விழுப்புரத்தில் 70 மி.மீ., வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம், ஆலங்காயத்தில் 60 மி.மீ. மழை பதிவானது.
குன்னூர்: உதகை, குன்னூர் மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போனதால் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு மலைக் காய்க்கறிகளை பயிரிட்டிருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் உதகை, குன்னூர் மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டமும் உயரும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.