சென்னை: நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்படவில்லை என்று கடந்த வாரம் சட்டப்பேரவையில் சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழக அரசு அனுப்பிய நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரும் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று விளக்கம் அளித்திருந்தது.
சட்டப்பேரவையில் இன்று நீட் விலக்கு கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பிய மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்திருப்பது குறித்து தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் பேசினார்.
அதாவது, நீட் மசோதாக்கள் வித் ஹெல்ட் என்று போட்டு திருப்பி அனுப்பப்பட்டது பற்றி விளக்கம் கேட்டுள்ளோம். நீட் விலக்குக் கோரி தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.
காரணம் தெரிந்தால்தான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய முடியும். ரிட்டர்ன் என்றோ, ரிஜக்ட் என்றோ மத்திய அரசு குறிப்பிடவில்லை. வித் ஹெல்ட் என்று எழுதி நீட் மசோதாக்களை அனுப்பியிருந்ததால்தான், மசோதாக்கள் நிராகரிக்கப்படவில்லை, நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று தான் பேரவையில் கூறியதாகவும், நீட் விவகாரத்தில் தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை என்றும் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், வித் ஹெல்ட் என்றுதான் குறிப்பிட்டு அனுப்பிவார்கள். அவ்வாறு குறிப்பிட்டால் நிராகரிப்பு என்றுதான் அர்த்தம். இனி என்ன? நீட் விவகாரம் தொடர்பாக புதிதாக மசோதாக்கள் நிறைவேற்றப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.