தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவராக ஆ.கே.செல்வமணி தேர்வு செய்யப்பட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். பதவியில் இருந்த விக்ரமன் தலைமையிலான, நிர்வாகத்தின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய நிர்வாகத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இரு முனைப்போட்டி: இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி, வித்யாசாகர் இருவரும் போட்டியிட்டனர்.
சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் செந்தில்நாதன்
மேற்பார்வையில் தேர்தல் நடைபெற்றது.
தலைவர், இரண்டு துணைத் தலைவர், நான்கு இணைச் செயலாளர்கள் மற்றும் 12 செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு இந்தத் தேர்தல் நடைபெற்றது. பொதுச் செயலாளர் பதவிக்கு ஆர்.வி. உதயகுமாரும், பொருளாளர் பதவிக்கு இயக்குநர் பேரரசுவும் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
4 மணிக்கு தேர்தல் முடிவடைந்த நிலையில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான 1503 வாக்குகளில் 1386 வாக்குகள் பெற்று ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வித்யாசாகர் 100 வாக்குகள் மட்டுமே பெற்றார்.