சென்னை மியூசிக் அகாதெமியின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இசைக் கலைஞர் எஸ்.செளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
மியூசிக் அகாதெமியின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் சங்கீத கலாநிதி, சங்கீத கலா ஆச்சார்யா, டிடிகே விருது, மியூசிக்காலஜிஸ்ட், நிருத்ய கலாநிதி உள்ளிட்ட விருதுகளுக்கு, விருதாளர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதன்படி, சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசைக்கலைஞர் எஸ்.சௌம்யாவுக்கு வழங்கப்படுகிறது. எம்.எஸ்.ஷீலா மற்றும் சீதா நாராயணனுக்கு கலா ஆச்சார்யா விருது வழங்கப்படுகிறது.
நாகஸ்வர கலைஞர் வியாசர்பாடி கோதண்டராமன் மற்றும் மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரன் ராஜ்குமார் பாரதிக்கு டிடிகே விருது வழங்கப்படுகிறது. மியூசிக்காலஜிஸ்ட் விருதுக்கு ஆர்த்தி என்.ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் 2020-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நடைபெற உள்ள விழாவில், இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
பிரியதர்ஷினி கோவிந்துக்கு நிருத்ய கலாநிதி நாட்டிய விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறும் நாட்டிய விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.