நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐசரி கணேஷ் திங்கள்கிழமை ஆஜரானார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், சென்னையில் கடந்த ஜூன் 23-ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி நடிகர் விஷால், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விடுமுறை நாளில் அவசர வழக்காக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வீட்டில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரிப்பதற்கு முன் நீதிபதிக்கு தெரிந்தவராக அறியப்படும் அனந்தராமன் என்பவர், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டாம் எனவும், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தால், தேர்தல் தள்ளிப்போகும் எனவும் இந்தத் தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசரி கணேஷ் விரும்புவதாக நீதிபதியிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.
தொலைபேசி இணைப்பை நீதிபதி துண்டித்ததால், அனந்தராமன் நேரில் சந்திக்க முயற்சித்துள்ளார். இதனையடுத்து அனந்தராமன் மற்றும் ஐசரி கணேஷ் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவு செய்தார். மேலும், இந்த வழக்கில் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பினார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அனந்தராமன், ஐசரி கணேஷ் ஆகியோர் நேரில் ஆஜராகி, வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.