மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட அ.தி.மு.க. மற்றும் திமுக எம்பிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அதன்படி, தி.மு.க. சார்பில் தேர்வான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதவியேற்றுக் கொண்டார். மேலும் திமுக சார்பில் சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோரும் இன்று பதவியேற்றனர்.
'இந்திய இறையாண்மையை பற்றி நிற்பேன்' என தமிழில் உறுதிமொழி கூறி மாநிலங்களவை எம்.பி.யாக வைகோ பதவியேற்றுக்கொண்டார். இவர்களுக்கு துணை குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து கூறி கவிதை எழுதியுள்ளார்.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டரில்,
வாழ்த்துக்கள் வைகோ...
சிறுத்தைபோல் நடந்து சென்றாய்
செம்மொழி உறுதி பூண்டாய்
நிறுத்தவே முடியவில்லை
நீள்விழி வடித்த கண்ணீர்
போர்த்திறம் பழக்கு - விட்டுப்
போகட்டும் வழக்கு - உன்
வார்த்தைகள் முழக்கு - நீ
வடக்கிலே கிழக்கு
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.