ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக அரசு மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
அதன்படி வரும் திங்கள்கிழமை (ஜூலை 29) முதல் ஒத்துழையாமை நடவடிக்கைகள், உண்ணாவிரதம் என வெவ்வேறு போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பை (ஃபோக்டா) சேர்ந்த டாக்டர்கள் பாலகிருஷ்ணன், ராமலிங்கம், சுந்தரேசன் ஆகியோர் கூறியதாவது:
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களின் பணியிடங்களைக் குறைக்கக் கூடாது. மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்களைக் கலந்தாய்வு மூலம் மட்டுமே பணிநியமனம் செய்ய வேண்டும்.
மருத்துவ மேற்படிப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் ஏற்கெனவே இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டைத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால், அதன்பேரில் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக சுகாதாரத் துறை செயலரிடம் மனு அளித்துள்ளோம்.
இந்நிலையில், அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29-ஆம் தேதி முதல் ஒத்துழையாமை போராட்டங்களையும், வேலை புறக்கணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளோம்.
அடுத்த மாதம் 20-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களில் மனிதச் சங்கிலி போராட்டமும், 23-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்படும்.
அதைத் தொடர்ந்து, 27-ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.
அவசர சிகிச்சைக்கு பாதிப்பு ஏற்படாமல் அந்தப் போராட்டங்கள் நடைபெற உள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.