வேலூர்: இன்னும் இரண்டு முதல் ஆறு மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திங்களன்று பிரசாரம் செய்தார்.
வாணியம்பாடி, காமராஜபுரம், அழிஞ்சிகுளம் உள்ளிட்ட இடங்ககளில் அவர் நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
இன்னும் இரண்டு முதல் ஆறு மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி. திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் முதல்வராவார். இந்தியா முழுவதும் வெற்றி பெற்ற மோடியால் தமிழகத்தில் வெற்றி பெற முடியவில்லை. எடப்பாடிக்கும் அப்படிதான். மக்கள் விரட்டி அடித்தார்கள். வேலூர் தேர்தலில் திமுகவின் வெற்றி என்பது 100% உறுதி. எதிர்க்கட்சி வேட்பாளரை நீங்கள் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.