திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான விழா கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்று வருகின்றன.
நான்காம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. பல்வேறு வகையான இனிப்பு பலகாரங்கள், மலர்கள், வளையல் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருள்களுடன் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். பிரசாதமாக பெண்களுக்கு வளையல்கள் விநியோகிக்கப்பட்டன.