காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு துணை ராணுவப் படை பாதுகாப்பு வழங்கக் கோருதல் உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சேலம் கண்ணன்குறிச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதே போன்று, அத்திவரதர் தரிசனத்துக்கு துணை ராணுவப் படை பாதுகாப்பு வழங்கக் கோரியும், வரதராஜர் சந்நிதியைத் திறக்கக் கோரியும், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரியும், அத்திவரதர் தரிசனம் நடைபெறும் கோயிலைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும்; அத்திவரதரை தரிசிக்க வரும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரமாக காத்திருக்க நேரிடுவதால், பக்தர்களுக்கு குளிர்சாதன வசதி ஏற்படுத்தித் தரக் கோரியது உள்பட ஆறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்கு விசாரணையின்போது, அரசு தரப்பில் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும், தரிசனம் தொடர்பான விரிவான ஏற்பாடுகள் குறித்தும் தெரிவிக்கப்
பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு துணை ராணுவப் படை பாதுகாப்பு கோருதல் உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.