சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலிருந்து விமானத்தில் திருச்சி வந்த பயணிகளிடமிருந்து 2.60 கிலோ கடத்தல் தங்கம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 11 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மலேசிய தலைநகர், கோலாலம்பூரிலிருந்து திங்கள்கிழமை அதிகாலை திருச்சி வந்த மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனைக்கு உள்படுத்தினர். அப்போது 9 பயணிகள் தங்களது உடைமைக்குள் தங்கத்தை மறைத்து, கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதுபோல, சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணித்த 2 பயணிகளும் உடைமைக்குள் தங்கத்தை கடத்தி வந்ததை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து மலேசியாவிலிருந்து வந்த திருச்சி அப்துல் அஜீஸ், அப்துல் ரஹீம் , செய்யது இப்ராஹிம் , சாகுல் அமீது , சாதிக் பாட்சா , செய்யது அபுதாகீர், அம்ஜத் கான் , மதுரை சிக்கந்தர், திருநெல்வேலி அப்துல் மஜீத் மற்றும் சிங்கப்பூரிலிருந்து வந்த சென்னை நரசிம்ம செட்டி , மற்றும் திருச்சி அப்துல்காதர் ஆகிய 11 பேரிடம் இருந்து ரூ. 90.35 லட்சம் மதிப்புள்ள
2.60 கிலோ தங்கக்கட்டிகள் மற்றும் நகைளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் 11 பேரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.