தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 10 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக திருத்தணி, வேலூரில் தலா 107 டிகிரி வெப்பநிலை பதிவானது. சனிக்கிழமை வழக்கத்தைவிட 4 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது என்று வானி லை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வெள்ளிக்கிழமை மதுரை விமானநிலையத்தில் 104 டிகிரி, கடலூர், மதுரை தெற்கில் தலா 103 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், பாளையங்கோட்டை, திருச்சியில் தலா 102 டிகிரி, பரங்கிப்பேட்டை, சேலத்தில் தலா 101 டிகிரி வெப்பநிலை பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது: தமிழகத்தில் சில மாவட்டங்களில் சனிக்கிழமை (ஜூன் 1) வழக்கத்தை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக திருவள்ளூர், வேலூர், சேலம், மதுரை, திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் வழக்கத்தைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.
மிதமான மழை: வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் சனிக்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
பருவமழை: அரபிக்கடலின் தென்பகுதிகள், மாலத்தீவு, குமரிக்கடலில் சில பகுதிகள், கிழக்கு, மத்திய வங்கக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 72 மணி நேரத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது என்றார் அவர்.