புதிய ஆலைகளுக்கான கட்டட அனுமதி பெற மேற்கொள்ளப்படும் களஆய்வு அறிக்கையை 48 மணி நேரத்துக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டுமென நகர் மற்றும் ஊரமைப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, அந்தத் துறை வெளியிட்ட உத்தரவு:
வணிக நடைமுறைகளை எளிதாக்கும் சட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, தொழிற்சாலைகளை கட்டமைப்பதற்கான கட்டட ஒப்புதல்களை நகர் மற்றும் ஊரமைப்புத் துறையிடம் இருந்து பெற வேண்டும். இவ்வாறு பெறப்படும் ஒப்புதலானது துறையின் களஆய்வுக்குப் பிறகே அளிக்கப்படுகிறது. இந்த களஆய்வு மேற்கொண்ட பிறகு, அதற்கான அறிக்கை துறையின் சார்பில் அளிக்கப்படும். களஆய்வை மேற்கொண்டு, அதுகுறித்த அறிக்கையைத் தயார் செய்த பிறகு 48 மணி நேரத்துக்குள்ளாக அதனை நகர் மற்றும் ஊரமைப்புத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.