குன்னூர், கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் பூத்துக் குலுங்கும் ஜகரண்டா மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வசீகரித்து வருகிறது.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள், சுற்றுலாத் தலங்கள் அதிக அளவில் உள்ளன.
சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் சாலையோரங்கள், சுற்றுலாத் தலங்கள், தேயிலைத் தோட்டங்கள், குடியிருப்புப் பகுதிகள் போன்ற இடங்களில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜகரண்டா மரங்கள் நடவு செய்யப்பட்டன.
நிழல் தரும் மரமாகவும், தேயிலைத் தோட்டங்களை அழகுபடுத்தவும், வேலிக்காகவும் இவை நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த மரங்களில் ஆண்டுக்கு ஒரு முறை மலர்கள் பூக்கும். இந்தக் காலங்களில் இந்த மரத்தில் உள்ள இலைகள் உதிர்ந்து, மலர்கள் மட்டும் ஊதா நிறத்தில் பூத்துக் குலுங்கும்.
மரம் முழுவதும் ஊதா நிறமாக காட்சியளிக்கும். இதனை பள்ளிக் குழந்தைகள் "பட்டாசுப் பூ' என்று அழைத்து வருகின்றனர். தற்போது இப்பகுதிகளில் ஜகரண்டா மலர்கள் பூத்துக் குலுங்கின்றன.
இதனை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்துச் செல்கின்றனர்.